வெள்ளி, 14 ஏப்ரல், 2017

சிறுகுறிஞ்சான்-ஆரோக்கிய பலன்கள்


சிறுகுறிஞ்சான்- ஆரோக்கிய பலன்கள்


வேறு பெயர்கள்: அயகம், அமுதடிசுப்பம், ஆதிகம், குறிஞ்சான், குரித்தை.

வகை:சிறுகுறிஞ்சான்


ஆங்கிலப் பெயர்: Gymnema sylvestre; R.Br.Anclepiadac  எதிர் அடுக்குகளில் அமைந்த இலைகளை உடையது சிறுகுறிஞ்சான். இலைக் கோணத்தில் அமைந்த பூங்கொத்துக்களையும் உடைய சுற்றுக்கொடி இனம் இது. முதிர்ந்த காய்களில் இருந்து பஞ்சுபொருந்திய காற்றில் பறக்கக்கூடிய விதைகளைக் கொண்டது. இலை, வேர், மருத்துவக் குணம் உடையது. இலை பித்தம் பெருக்கும். தும்மலை உண்டாக்கும். மேலும் வாந்தி உண்டாக்கி நஞ்சை முறிக்கும் குணம் உடையது. தமிழ்நாடெங்கும் சிறு காடுகளில் தானாகவே வளர்கின்றது.

சிறு குறிஞ்சான் மூலிகை சர்க்கரை வியாதிக்கு மிகச்சிறந்த மருந்து. இது வேலிகளில் கொடியாக படரும். கசப்புச் சுவை உடையது. இலை சிறிதாகவும், முனை கூர்மையாகவும் மிளகாயிலை போன்று காணப்படும். மலையைச் சார்ந்த காடுகளில் இது அதிகம் வளர்கிறது. இத்தகைய தாவரங்களுக்கு சர்க்கரை கொல்லிகள் என்று தமிழில் சொல் வழக்கு உண்டு. முழுத்தாவரமும் மருத்துவகுணம் கொண்டது. இலைகள், விதைகள், வேர் மருத்துவ குணம் கொண்டவை.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்:

ஜிம்னீமாவில் சபோனின் மற்றும் பாலிபெப்டைடுகள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. இலைகளில் ஜிம்னீமிக் அமிலம் மற்றும் குர்மாரின் காணப்படுகின்றன. இவை மட்டுமின்றி ஜிம்னமைன் என்னும் அல்கலாய்டும் காணப்படுகிறது.

சர்க்கரைக் கொல்லி

சமீப காலமாக இந்தியா மற்றும் ஜப்பானில் ஜிம்னீமா தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் விளைவாக நீரிழிவு நோயினை இயற்கையாக கட்டுப்படுத்த ஜிம்னிமா இலைகள் பெரிதும் பயனுள்ளவை என்பது கண்டறியப்பட்டுள்ளது. மருத்துவ ஆய்வுகளில் நீரிழிவு நோயினால் அவதிப்படுபவர்களுக்கு குறைவான இன்சுலின் தேவைப்படுவது தெரியவந்துள்ளது. இலைகள் நாக்கின் இனிப்பு சுவைமொட்டுக்களை தற்காலிகமாக செயல் இழக்கச் செய்து அதற்கான ஆர்வத்தினைத் தடுத்து செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இலைகள் மிக முக்கிய மருத்துவ பயன் கொண்டவை. நீரிழிவு நோயினை தடுக்க முக்கிய மருந்தாக இந்தியாவில் நெடுங்காலமாக பயன்படுத்தப்படுகிறது. இதிலுள்ள ஜிம்னீமிக் அமிலம் சர்க்கரைக்கான ஆசையினை கட்டுப்படுத்துகிறது. நாவிலுள்ள உணர்ச்சி மொட்டுக்களை தற்காலிகமாக செயல் இழக்கச் செய்கிறது. மேலும் கணயத்தில் உள்ள செல்களை புத்துயிர்க்கச் செய்து இன்சுலின் சுரப்பினை மேம்படுத்துகிறது. எடை குறைக்க உதவுகிறது.

விதைகள் வாந்தியினைத் தூண்டக் கூடியது. சளியினை போக்க வல்லது. வேர்ப்பகுதி இருமலுக்கு சிறந்த மருந்து. வயிற்று வலியினை போக்கி வலுவினைத் தருகிறது. குளுமைப் படுத்தும் செயல் கொண்டது. சிறுநீர் போக்கினை தூண்ட வல்லது. மாதவிடாயினை தடுக்கக்கூடியது. வயிற்று வலியினை போக்க உதவுகிறது.

சிறுகுறிஞ்சான் இலையை நிழலில் காயவைத்து இடித்து தூள் செய்து சலித்து வைத்துக்கொண்டு சர்க்கரை வியாதி உள்ளவர்கள் நெய்யில் குழைத்து சாப்பிட்டால் சிறுநீரில் சர்க்கரையின் அளவு குறைந்து நாளைடைவில் நோய் முற்றிலும் குணமடைந்து விடும்.

விஷக்கடி போக்கும்  

வண்டு, பூரான், செய்யான் செவ்வட்டை முதலியவற்றின் விஷங்கள் உடலில் தங்கினால் அதன் மூலம் பலவித வியாதிகள் வரும். இதற்கு சிறுகுறிஞ்சான் இலையில் மிளகு 5 வைத்து அரைத்து சுண்டக்காய் பிரமாணம் இருவேளை சாப்பிட்டால் அனைத்து விஷ ரோகமும் போய்விடும். ஆனால் விடாமல் ஒரு மண்டலம் சாப்பிட வேண்டும். கடுகு, புளி சேர்க்காமல் பத்தியம் இருக்க வேண்டும். உடல்மேல் வரும் தடிப்பு, பத்து, படை, இவைகளுக்கு இதன் இலையை அரைத்து பூசி வர அவை மறைந்துவிடும். ரத்தத்தை சுத்தம் செய்து உடலை வனப்பாக வைக்கும்.

நீரிழிவு உள்ளவர்கள் சக்கரைகொல்லி எனப்படும் சிறுகுறிஞ்சா இலையை உண்பதாலும் நிவாரணம் பெறலாம். இது இன்சுலின் என்னும் ஓமோன் சுரக்கப்படுவதைத் தூண்டி இரத்தத்தில் குளுக்கோசின் அளவு அதிகரிப்பதைக் கட்டுபடுத்த உதவுகிறது. சிறுகுறிஞ்சா 2,3 இலையைக் காலையில் பச்சையாகச்  சாப்பிடலாம். .

சிறுகுறிஞ்சான் மிகுந்த மருத்துவப் பயன் கொண்டது. சித்த, ஆயுர்வேத மருத்துவங்களில் இதன் பயன்பாடு அதிகம். இது கொடி வகையைச் சார்ந்தது. மரங்களில் கொடியாகப் படரும். கசப்புச் சுவை கொண்டதால் இதனை பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவதில்லை.

  • நீரிழிவு நோயாளிகளின் முக்கிய உணவாக உட்கொள்ள வேண்டிய கீரை குறிஞ்சாக் கீரைதான். இன்று நம் நாட்டில் குறிப்பாக தென்தமிழ்நாட்டில் அதிக மக்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • உணவு முறையின் மாறுபாடே நீரிழிவு நோய் வருவதற்கு முக்கியக் காரணம். மேலும் உடல் உழைப்பின்மை, மன அழுத்தம் போன்ற காரணங்களாலும் நீரிழிவு நோய் ஏற்படுகிறது.
  • நீரிழிவு நோயாளிகளின் பாதிப்புகள் குறைய குறிஞ்சாக் கீரை மிகவும் உதவுகிறது. அதிக கசப்புத் தன்மை கொண்ட இந்தக் கீரை உடலின் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. மேலும் சர்க்கரை நோயின் பாதிப்பு ஏற்படாமல் வருமுன் காக்க குறிஞ்சாக் கீரை சிறந்த மருந்தாகும்.
  • குறிஞ்சாக் கீரையை நன்கு நீர்விட்டு அலசி, அதனுடன் சின்ன வெங்காயம் சேர்த்து சிறிது நீர்விட்டு அவித்து சிறிது நேரம் அப்படியே ஊறவைத்து சாப்பிட வேண்டும்.
  • இவ்வாறு வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயின் தாக்கம் குறையும்.
  • நாவற் பழக் கொட்டையையும், சிறுகுறிஞ்சான் கீரையையும் நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்துக்கொண்டு தினமும் காலையில் 1 குவளை தண்ணீருக்கு 1 தேக்கரண்டி பொடி வீதம் இட்டு காய்ச்சி கஷாயமாக்கி அருந்தி வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.
  • உணவு முறை மாறுபாட்டாலும், நேரம் தவறி உணவு உண்பதாலும் வாயு சம்பந்தப்பட்ட உணவுகளை அடிக்கடி உண்பதாலும் சிலரின் வயிற்றில் வாயுவின் சீற்றம் மிகுந்து குடலின் உட்புறச் சுவர்களைப் பாதிக்கிறது. மேலும் மது, புகை, போதை வஸ்துக்களாலும் குடல் புண்ணாகிவிடும். இதனால் வாயிலும் புண்கள் உண்டாகும்.
  • இவர்கள் குறிஞ்சாக் கீரையை பாசிப் பருப்புடன் சேர்த்து காரம் சேர்க்காமல் வேகவைத்து கடைந்து நெய் கலந்து உணவில் சேர்த்துக்கொண்டால் வயிற்றுப்புண் மற்றும் வாய்ப்புண் விரைவில் குணமாகும். மேலும் வயிற்றுப் பூச்சிகள் நீங்கும்.
  • குறிஞ்சாக் கீரையை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் காலையில் கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் உடலில் நோயின் தாக்கம் ஏதுமின்றி நல்ல வலுவுள்ள உடலைப் பெறலாம்.
  • சிலர் எப்போது பார்த்தாலும் பசியில்லை என்று புலம்பிக்கொண்டே இருப்பார்கள். இவர்கள் தினமும் குறிஞ்சாக் கீரையை பாசிப்பருப்புடன் சேர்த்து சமைத்து உணவில் சேர்த்துக்கொண்டால் நன்கு பசியைத் தூண்டும். ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
  • வாரம் இருமுறை குறிஞ்சாக் கீரையை உணவில் சேர்த்து உண்டு வந்தால் உடல் சூடு தணியும்.
  • கடும் சுரம், இருமலால் பாதிக்கப்பட்டவர்கள் குறிஞ்சாக் கீரையை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரை அருந்தி வருவது நல்லது.
  • குறிஞ்சாக் கீரையை வேகவைத்து அதனுடன் தேங்காய் துருவல், உப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஈரலில் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும்.
  • மேலும் குறிஞ்சாக் கீரையை ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி நெறிகட்டிய இடத்தில் வைத்து கட்டினால் வலி குறையும்.
  • எத்தகைய விஷக்கடியாக இருந்தாலும் குறிஞ்சாக் கீரையை கடிபட்ட இடத்தில் வைத்து கட்டியும், கீரையை கஷாயம் செய்து சாப்பிட்டால் விஷம் விரைவில் முறியும்.
  • சிறு குறிஞ்சானைக் கொடி இலையுடன் 50 கிராம் எடுத்து, திரிகடுகு வகைக்கு 10 கிராம் எடுத்து, ஒன்றிரண்டாக இடித்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி 10 மில்லியளவு 10 நிமிடத்திற்கு ஒரு முறை குடித்து வர ஒரே நாளில் தணியாத தாகத்துடன் கூடிய காய்ச்சல் குணமாகும்.
  • சிறு குறிஞ்சான் கொடி இலையுடன் 10 கிராம், களா இலை 20 கிராம் சேர்த்து அரைத்து காலையில் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட தாமதமாக வருகின்ற மாதவிலக்குப் பிரச்சினை, இரத்தப் போக்கு, கற்பாயாசக் கோளாறுகள் குணமாகும்
  • சிறு குறிஞ்சான் இலை ஒரு கைப்பிடி அளவும், தென்னம்பூ இரண்டு கைப்பிடி அளவும் எடுத்துச் சேர்த்து அரைத்து பட்டாணி அளவு மாத்திரைகளாக உருட்டி நிழலில் காயவைத்து எடுத்து 2 வேளை ஒரு மாத்திரை வீதம் வெந்நீரில் சாப்பிட்டு வர சர்க்கரை நோய் குணமாகும்.
  • சிறு குறிஞ்சான் வேரை நிழலில் உலர்த்திக் காய வைத்து இடித்துப் பொடியாக்கி 1 சிட்டிகையளவு எடுத்து திரிகடுகு சூரணம் 1 சிட்டிகையுடன் கலந்து வெந்நீரில் இரண்டு வேளை தொடர்ந்து சாப்பிட்டு வர கபம் வெளியேறி இரைப்பிருமல் (ஆஸ்துமா) மூச்சுத்திணறல் குணமாகும்.
  • சிறு குறிஞ்சான் வேரை நன்கு நசுக்கியது 40 கிராம் எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு 100 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி 30 மில்லியளவு எடுத்து 3 வேளை குடித்து வரக் காய்ச்சல், இருமல், காசம் குணமாகும்.
  • சிறு குறிஞ்சான் இலையைப் பிட்டவியலாய் அவித்து சாறு எடுத்து 200 மில்லியளவு, உள்ளி, சுக்கு, மிளகு, சீரகம், கடுகு, வெந்தயம் வகைக்கு 30 கிராம் எடுத்து வெதுப்பிப் பொடி செய்து இரண்டையும் கலந்து, 3 நாள்கள் காலையில் கொடுத்து வர குடல்வாதம் நீங்கும்.
  • சிறுகுறிஞ்சானின் பட்டையைப் பொடியாக்கி அதேயளவு சர்க்கரை கூட்டி, ஒரு தேக்கரண்டியளவு இரண்டு வேளை சாப்பிட்டு வர, உடம்பிலுள்ள காணாத வியாதிகள் நீங்கும். உடலுக்கு வலிமை உண்டாகும்.
  • சிறுகுறிஞ்சான் வேரை அல்லது உலர்ந்த இலையைப் பொடியாக்கி ஒரு தேக்கரண்டியளவு சாப்பிட்டு வெந்நீர் குடிக்க வாந்தியாகும்.
  • மதுமேகம் எனும் நீரிழிவு தோன்றும் வழிபற்றிச் சித்தர்கள் கூறிய கருத்துக்களை இங்கே காண்போம். அகத்தியரால் 1200இல் பின்வருமாறு நோய்வரும் வழி விவரிக்கப்பட்டுள்ளது.

"கோதையர் கலவி போதைகொழுத்தமீ னிறைச்சி போதைப்பாதுவாய் நெய்யும் பாலும்பரிவுட ணுன்பீ ராகில்சோதபாண் டுருவ மிக்கசுக்கில பிரமே கந்தான்ஒதுநீ ரிழிவு சேரஉண்டென வறிந்து கொள்ளே''

விளக்கம் :- "அதாவது பலருடன் / அதிக அளவில் உடலுறவில் ஈடுபடுதல், மீன் இறைச்சி போன்ற மாமிச உணவுகளை மிக அதிகமாகப் புசித்தல், நெய், பால் போன்ற உணவுவகைகளை அதிகமாகப் புசித்தலாலும் இந்நோய் தோன்றும் என அகத்தியர் தெரிவிக்கிறார். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது முதுமொழி. அதற்கேற்ப உடல் உறவு மற்றும் உணவு முறைகளிலும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஈடுபடும் போதும் மதுமேகம் எனும் நீரிழிவு தோன்றுகிறது".

நமது உடலில் ஏழு உடல் தாதுக்கள் உண்டு. அவை சாரம், செந்நீர், ஊன், கொழுப்பு, என்பு, மூளை மற்றும் சுக்கிலம் / சுரோணிதம் ஆகும். அதாவது நாம் உண்ணும் உணவானது செரித்தபின் “சாரம்”' எனப்படும். இது குடலுறிஞ்சிகளால் உறிஞ்சப்பட்டு “செந்நீர்”' ஆகிறது. பின் இது “ஊன்” எனப்படும் மாமிசமாக மாறும். மேலும் உறிஞ்சப்பட்ட சத்துகள் “கொழுப்பாக”' உடலில் சேர்த்து வைக்கப்படுகிறது. இதிலிருந்து என்பு, மூளை மற்றும் சுக்கிலம் / சுரோணிதம் எனப்படும் ஆண் மற்றும் பெண்ணின் இனப் பெருக்கத்திற்கான சக்தியாக மாறும்.

இந்த மாறுதல்கள் நம் அனைவருக்கும் முன்னோக்கி நடைபெறுகிறது. ஆனால் மதுமேகம் உடையவர்களுக்கு இது ஒன்றன் பின் ஒன்றாகக் குறைவுபட்டு உடல் எடை குறைகிறது. மது மேகத்தினால் உடலில் 10 விதமான அவஸ்த்தைகள் தோன்றுகின்றன.

இனி சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக் கொல்லியின் மகத்துவம் பற்றிப் பார்ப்போம். இதில் நாம் பயன்படுத்துவது இலையாகும். இந்த இலையினை வாயில் இட்டு மெல்லும் போது இது இனிப்புச் சுவையை நாம் அறிய விடாமல் செய்கிறது. இதுவே இதன் பயன்பாட்டிற்குத் தொடக்கமாக இருந்திருக்கக் கூடும். மதுமேகம் மட்டுமல்லாது கரப்பான், மலக்கட்டு, வயிற்றில் ஏற்படும் நோய்கள், உடலில் இருந்து நீர் சரியாக வெளியேறாது இருத்தல் மற்றும் ஈரல் நோய்களிலும் இதன் பயன்பாடும் இருந்து வந்துள்ளது. ஆயின் முக்கியமாக இது மதுமேகத்திற்கே பயன்படுத்தப்படுகிறது. பொன்குரண்டி போலவே பயன்படுத்தப்படும் இது இந்திய மருத்துவ முறைகளில் பல நூற்றாண்டுகளாக இருந்துவந்துள்ளது.

சிறுகுறிஞ்சான் தென் இந்தியாவில் அதிகமாக வளர்க்கப்பட்டு மூலிகை ஏற்றுமதியிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. மதுமேகம் ஆங்கில மருத்துவத்தில் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. அவை 1. இன்சுலின் எடுக்க வேண்டியது அவசியமாக உள்ளது. 2. இன்சுலின் தேவையற்றது. இதில் சிறுகுறிஞ்சானின் பயன் இரண்டாவது வகையிலேயே அதிகமாக உள்ளது.

சர்க்கரைக் கொல்லியின் மருத்துவப் பயன்பாடு நவீன மருத்துவ முறையில் 1930களில் இருந்து உணரப்பட்டு வந்துள்ளது. சர்க்கரைக் கொல்லி இலை இரத்தத்தில் இன்சுலின் அளவை அதிகரிக்கிறது. நமது உடலிலுள்ள கணையத்திலிருக்கும் பி.செல் இன்சுலினை உற்பத்தி செய்கிறது. இதில் ஏற்படும் குறைபாடே இரத்தத்தில் சர்க்கரையை அதிகரிக்கச் செய்கிறது. இந்த செல்களின் எண்ணிக்கையை சிறு குறிஞ்சான் அதிகரிக்கிறது. இதன் மூலம் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. இது தவிர கொலஸ்டிரால் மற்றும் டிரைகிளிசரைடின் அளவையும் குறைக்கிறது. இந்த செயல்கள் அனைத்திற்கும் சிறுகுறிஞ்சானில் இருக்கும் ஜிம்னிக் அமிலமே காரணியாகும். இதுதவிர சிறுகுறிஞ்சான் குடலுறிஞ்சிகளில் இருந்து குளுக்கோஸ் உறிஞ்சப்படுவதைக் குறைக்கிறது.

"சர்க்கரைக் கொல்லி"யாகிய சிறுகுறிஞ்சான் கணையத்தில் இன்சுலின் சுரப்பிக்கும் பீட்டா செல்களைப் புதுப்பித்து அவற்றின் எண்ணிக்கையை இரு மடங்காக்குகிறது. அதனால் இயற்கையாகவே இன்சுலின் சுரப்பு அதிகமாவதாலும், குடலில் சர்க்கரை உறிஞ்சப்படும் வேகத்தைக் குறைப்பதாலும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துகிறது. மேலும் ரத்தத்தில் கொலஸ்டிரால், டிரைகிளிசரைடு ஆகியவற்றின் அளவைக் குறைப்பது மட்டுமன்றி, நல்ல கொழுப்பான H.D.L. ன் அளவை அதிகரிக்கவும் செய்கிறது. மாரடைப்புக்குக் காரணமாகும் ரத்தக் குழாய்களில் கொழுப்புப் படிவதைத் தடுக்கிறது.


தொகுப்பு - நன்றி இணைய தகவல்கள்

Tamilnettips

Disclaimer- Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors' advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred using/trying the articles, videos, tips from this site.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comments System

Disqus Shortname